திருக்கோவில் பிரதேச சபை உட்பட 67 உள்ளூராட்சி சபைகளுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 23-07-2011 சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருக்கோவில் பிரதேச நிலவரங்கள் எவ்வாறு இருக்கின்றது என வில்லொளி தருகின்றது.
2011 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி சபைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் 48 மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், திருக்கோவில் பிரதேச மக்கள் யாருக்கு தமது வாக்குகளை இடுவது என்பதை ஓரளவு தீர்மானித்திருக்கிறார்கள். ஏறத்தாழ 16,000 வாக்காளர்களைக் கொண்ட இப்பிரதேசத்திலே உள்ள பிரதேச சபைக்கு 9 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலே பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் சுமார் 8,500 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதன்படி புலிச்சார்பு இலங்கை தமிழரசுக் கட்சியினர் 9 ஆசனங்களையும் கைப்பற்றி இருந்தனர். ஏனைய கட்சிகளால் தமது கட்டுப் பணத்தைக் கூட வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது..
இது இவ்வாறிருக்க, இந்த தடவை இவ்வாறானதொரு பாரிய வெற்றி எந்தக் கட்சிக்காவது கிடைக்குமா என்று பார்த்தால் அது மிகக் கஷ்டம்தான். பல கட்சிகள் இத்தேர்தலிலே குதித்திருந்தாலும் இங்கு இடம்பெறப்போவதென்னவோ மும்முனைப் போட்டிதான். அரச விரோத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பவற்றுக்கிடையேதான் பாரிய போட்டி நிலவுகின்றது.
வில்லொளியின் கருத்துக் கணிப்பின் படி,
த.தே.கூ - 5/6 ஆசனங்கள்
ஐ.தே.க - 2/3 ஆசனங்கள்
ஐ.ம.சு.கூ - 1 ஆசனம்
என்ற விகிதத்தின்படி பெறக்கூடிய சாத்தியங்களே காணப்படுகின்றன.
ஆளும் ஐ.ம.சு.கூ இன் அதி உச்ச பிரச்சாரங்களும், விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் அநுகூலங்களும் சேர்ந்து ஐ.ம.சு.கூ இற்கு ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொடுக்கலாம். த.தே.கூ இன் வீழ்ச்சிக்கான காரணங்களைப் பார்க்குமிடத்து புலிகளின் மெளனிப்பு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. எனினும் அபேட்சகர்கள் தெரிவில் த. தே.கூ அதிக கவனம் செலுத்தவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. கட்சியில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் மக்களின் மனங்களை வெல்லக் கூடியவர்களாக காணப்படவில்லை. அத்துடன் ஐ.தே.க ஒரு சில முக்கிய புள்ளிகளை வாங்கி த.தே.கூ இன் வாக்கு வங்கியைச் சிதைத்துள்ளது.
தம்பட்டை, விநாயகபுரம், சாகாமம் போன்ற இடங்களில் த.தே.கூ இற்கு அதிகளவான செல்வாக்கு காணப்படுகின்றது. தம்பிலுவில், திருக்கோவில் பிரதேசங்களின் ஒரு சில இடங்களில் த.தே.கூ முழுமையாக ஆதிக்கம் செலுத்தினாலும், சில இடங்களில் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
எது எவ்வாறெனினும் மக்கள் எக்கட்சியைத் தேர்ந்தெடுப்பது என்பதில் அவதானமாக இருக்க வேண்டும். த.தே.கூ இன் ஆசனங்களை குறைவடையச் செய்வதன் மூலம் தமது பிரச்சாரங்களை முன்னெடுக்க அரசுக்கு இயலுமானதாவிருக்கும். த.தே.கூ இற்கு வாக்களிப்பதன் மூலம் திருக்கோவில் பிரதேச மக்கள் அடையக்கூடிய புறத்தோற்ற அபிவிருத்திகள் எனப் பார்க்குமிடத்து எதுவுமில்லைதான். அதே போல் அரசுக் கட்சிகள் பெறும் வெற்றியும் பிரதேசத்தின் அப்விருத்திக்குப் பயன் படப் போவதில்லை. எனவே புற அபிவிருத்தியை விட சமூகச் சுயநிர்ணய உரிமையே இங்கு முதன்மை ஆகின்றது. அதை அடைவதற்கு இன்றைய நிலையில் த.தே.கூ ஐ விட வேறு எவரும் வழியாகத் தெரியவில்லை. எனவே, திருக்கோவில் பிரதேசச் சமூக அபிவிருத்திக்கு வாக்களிக்கும்படி மக்களை வில்லொளி வேண்டி நிற்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக