திங்கள், 25 ஜூலை, 2011

த.தே.கூ எம்மக்களுக்கு என்னதான் செய்யப் போகிறது..? - திருக்கோவில், காரைதீவு


ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த ஜூலை 23 ஆம் திகதி நடைபெற்றது. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 45 சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.இத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கிலுள்ள 18 உள்ளூராட்சி சபைகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 02 சபைகளையும் வெற்றி பெற்றுள்ளது. இத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் பாரிய வாக்கு சரிவுக்கு முகம் கொடுத்து சகல உள்ளூராட்சி சபைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளன.
இதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் இரு உள்ளூராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

திருக்கோவில் பிரதேச சபையில் த.தே.கூ 7 ஆசனங்களையும், ஐ.ம.சு.கூ, ஐ.தே.க என்பன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியிருக்கின்றது. கடந்த தேர்தலையும் விட அதிக வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையிலும், தமது மொத்த வளங்களை அரசு பயன்படுத்திய நிலையிலும் ஒரு ஆசனத்தை மட்டும் இங்கு பெற் முடிந்தது, அரசு மீதான மக்களின் வெறுப்பையே பிரதிபலிக்கின்றது. இதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி என்று கருதுவதானது ஆரோக்கியமான முடிவன்று.

இதனிலும் பார்க்க காரைதீவு பிரதேச சபை மக்கள் ஐ.ம.சு.கூ இற்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்காத ஒரேயொரு உள்ளூராட்சி சபையென்ற பெருமையைப் பெற உதவியிருக்கிறார்கள். இங்கு இலங்கை தமிழரசுக் கட்சி 4 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றி இருக்கின்றது. 

அம்பாறை மாவட்டத்தில் இவ்விரு பிரதேசங்களும் தமிழர்களைச் செறிவாகக் கொண்ட பிரதேசங்கள். இவ்விரு பிரதேசங்களுக்கும் பொருத்தமான தமிழ் தலைவர்கள் இல்லாமையே மக்களின் நெடுங்கால குறைபாடாகும். பெரும்பான்மைக் கட்சிகளை ஆதிக்கம் செலுத்த விடாமல் நெடுநாட்களாக இப்பிரதேச மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதன் காரணமாகவே த.தே.கூ வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வட இலங்கையில் கூட பேரினவாத கட்சிகளால் சபைகளைக் கைப்பற்ற முடிந்திருக்கிறது. ஆனால் திருக்கோவில், காரைதீவு பிரதேசங்களில் அது நடக்குமாற் போல் தென்படவில்லை.


த.தே.கூ இம்மக்களுக்கு என்னதான் செய்துள்ளது..? இனி என்னதான் செய்யப் போகிறது..? தமிழ் மக்களை காலம் காலமாக ஏமாற்றி அரசியல் வியாபாரம் நடாத்தி வரும் இவர்கள் மீண்டும் தங்களின் வக்கிர நோக்கத்தை தேர்தல் விஞ்ஞாபனம் எனும் போர்வையில் தமிழர்களே ஒன்றுபடுங்கள் இதனாலே தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்குக் காட்டலாம் எனக் கூறினர், காலத்துக்குக் காலம் மாறிமாறி வரும் பேரினவாத சிங்கள அரசாங்கங்களுடன் பின் கதவால் சென்று சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்து வரும் இச் சுயநல அரசியல்வாதிகள் மக்களுக்கு செய்யப்போகும் அபிவிருத்திப் பணிதான் என்ன?

எவருக்கும் அஞ்சாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை வழி நடத்தி வந்த வே.பிரபாகரனுக்குப் பின்னால் பெரும்பான்மை தமிழர்கள் இருந்த போதிலும், அந்த ஒன்று கூடலினால் எதுவும் சாதிக்க முடியாமல் அழிவுகளைச் சந்தித்தமை தான் வேதனையின் உச்சம்.
நன்றி-களத்துமேடு
எனவே, திருக்கோவில், காரைதீவு பிரதேச சபைகளில் வெற்றி பெற்ற அரசியல்வாதிகளே... நாங்கள் எப்போதும் அரசியல்வாதிகள் தான் என்று நிரூபிக்காமல் இப்பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக சிறிதளவாவது பாடு படுங்கள் என வில்லொளி தயவாகக் கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக