செவ்வாய், 26 ஜூலை, 2011

தகவலும் தொடர்பாடல் தொழிநுட்பமும் - முன்னோடிப் பரீட்சை

 இன்று(26-07-2011) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வரலாற்றில் முக்கியமானதொரு நாள். வன்னிப் பிராந்தியத்தின் மாபெரும் கல்விக்கழகமாகவும், ஆராய்ச்சி சாலையாகவும் விளங்குகின்ற வவுனியா வளாகம் சமூகத்திற்கு ஆற்றி வருகின்ற சேவைகள் அளப்பரியன. அவ்வழியில் நடைபெற்ற முக்கியமான மற்றுமொரு சேவையாக இம்முறை க.பொ.த(உ.த) பரீட்சைக்கு தோற்றவிருக்கிற மாணவர்களுக்காக இன்று நடாத்தப்பட்ட முன்னோடிப் பரீட்சையைக் கருதலாம்.

இலங்கை கல்வித் திணைக்களத்தின் புதிய பாடத்திட்டங்களின் படி அறிமுகப்படுத்தப்பட்ட பாடங்களுள் ஒன்றே தகவலும் தொடர்பாடல் தொழிநுட்பமும் ஆகும். இந்த ஆண்டுதான் இதற்கான முதலாவது அரச பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வவுனியா மாவட்ட மாணவர்களும் இந்த பாடத்தை தங்களுடைய பிரதான பாடங்களுள் ஒன்றாக வரித்துக் கொண்டார்கள். தமிழ் மொழியில் போதுமான வளமின்மை, பயிற்றப்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை என்பவற்றுக்கு மத்தியில் இப்பாடத்தை இம்மாணவர்கள் தெரிவு செய்தது இம்மாணவர்களின் மனத் தைரியத்தையே காட்டுகிறது. எப்படியோ கஷ்டப்பட்டு இரண்டு வருடங்களைப் பூர்த்திசெய்தார்கள். எனினும் சில பாடப் பரப்புகளின் மீதான அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க பாடசாலைகளால் முடியாதிருந்தது. இதன் போதுதான் பாடசாலை அதிபர் ஒருவர் மூலமாக வவுனியா வளாகத்தின் பெளதீக விஞ்ஞானத் துறையின் அப்போதைய தலைவராக இருந்த கலாநிதி. எஸ். கிருஷ்ணகுமார் அவர்களுக்கு இது பற்றி அறிவிக்கப்பட்டது. அக்கணம் முதல் வவுனியா வளாகம் இதற்காக ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தது.

மிகக்குறுகிய காலத்தில் முன்னோடிப் பரீட்சையொன்றை நடாத்துவதற்கான சகல ஒழுங்குகளையும் மேற்கொண்டனர். நிச்சயமாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம் சம்பந்தமாக தகவல்களை தமிழில் வழங்குவதென்பது மிகக் கடினமானதொரு பணியாகும். இப்படியான பாரிய பணியை வழங்குவதற்கு ஒருங்கிணைப்பாளராக கலாநிதி. எஸ். கிருஷ்ணகுமார் அவர்களும் நிகழ்ச்சித்திட்டப் பொறுப்பாளராக திரு. ரீ. ஜெயமுகன் அவர்களும் பணியாற்றியிருந்தனர். மிக முக்கியமாக வவுனியா வளாகத்தில் செய்முறையாளர்களாகக் கடமையாற்றும் கிருஷாந்த், முகமது ரிஃப்தி, சத்யபிரியா, கயானன், அகிலா, நிஷாந்தி, ஆர்த்தி, பிரியதர்சன் என்போர் மிகப்பாரியதொரு பங்களிப்பை வழங்கியிருந்தனர். இன்று மாலை பரீட்சை முடிவடைந்ததும் மாதிரி விடைகள் அம்மாணவர்களின் ஆசிரியர் மூலமாக வழங்கப்பட்டது.

இறுதி நிகழ்வின்போது வளாக முதல்வர் திரு. ஆர். நந்தகுமாரன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். பல்தேர்வு வினாக்கள், மற்றும் பல்கலைக்கழக அனுமதிக்கான உளச்சார்பு பரீட்சையின் முக்கியத்துவம் என்பவற்றை முதல்வர் தமது உரையில் வலியுறுத்தினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கலாநிதி. எஸ். கிருஷ்ணகுமார் அவர்கள் தமதுரையில், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி திரு. எஸ். குகனேசன் அவர்கள் தமது நிகழ்ச்சிக்கு ஆதரவும், அனுமதியும் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் முதல்வர், செய்முறையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் ஆசிரியர், மாணவர், நிகழ்ச்சித்திட்ட குழு என்போரும் தமது கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

ஆக மொத்ததில் மிகப் பயன்பாடானதொரு சேவையை வவுனியா வளாகம் இன்று வழங்கியிருந்தது. இந்த அர்ப்பணிப்பு நிறைந்த சேவைக்கு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் வில்லொளி தெரிவித்துக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக