வியாழன், 28 ஜூலை, 2011

வேதன அதிகரிப்பும் வேதனை அதிகரிப்பும்

இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் (FUTA) தொழிற்சங்க நடவடிக்கை  ஓரளவு எதிர்பாராத விதமாக, கடந்த வாரம் தற்காலிக முடக்கத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. என்றாலும், சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்கள் தலைவர் டாக்டர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி அவர்கள், தொழிற்சங்க பிரச்சினைகளை அரசாங்கம் கையாளும் வழி பற்றி தாம் நன்கு அறிந்திருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார். இரண்டரை மாதகாலமாக மிகத் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை, சடுதியாக நிறைவுற்றமையும், FUTA தலைவரின் இக்கூற்றும் உண்மையில் கல்வியாளர்களின் நியாயமான போராட்டம் வெற்றி அடைந்துவிட்டதா..? அல்லது இக்கட்டு நிலையை(Stalemate) அடைந்து விட்டதா என இரு வேறான ஐயங்களை எழுப்பியுள்ளது.


 இலங்கையின் உயர்கல்வித்துறையை எடுத்து நோக்கும்போது அது முக்கியமாக ஆராய்ச்சிபோதனை, சமூக சேவை என்ற மையக் குறிக்கோள்களைக் கொண்டுள்ளது.  சமூகத்திற்கு ’வேலைத்திறனுடைய’, ‘கேள்வியுள்ள’ பட்டதாரிகளை அனுப்புவதில் பல்கலைக்கழகங்களும், கல்வியாளர்களும் பங்காற்றி வருகின்றனர். கல்வியாளர்களின் இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது வெறுமனே பல்கலைக் கழக மாணவர்களுக்கான பாதிப்பு மட்டுமில்லை என்பதை பலர் உணராதவர்களாக காணப்படுவது மிகுந்த வேதனையளிக்கின்றது. இந்நடவடிக்கையினால், ஏனைய பணிகளுக்கான செயற்திறன் மிக்க பணியாளர்கள் வருவதும் தாமதப் படுத்தப்படும் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஏனைய தொழிற்சங்க நடவடிக்கைகளைப் போன்று இது வெறுமனே வேதன அதிகரிப்புக்கான போராட்டம் அல்ல என்பதைப் பலர் விளங்கிக் கொள்ள மறுக்கின்றனர். எனவேதான், இத் தொழிற்சங்க நடவடிக்கை முற்றுப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது முதல் கல்வி சாராத ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையொன்று நடைபெறப் போவதாக கதையொன்று பரவி வருகின்றது. கல்வியாளர்களுள் முதுநிலைப் பேராசிரியர்களின் எண்ணிக்கை இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றது. முதுநிலை பேராசிரியர்களின் இந்த எண்ணிக்கை வீழ்ச்சியானது அவர்களின் பிறநாட்டு வெளியேற்றத்தினால் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறான இவர்களின் இந்த வெளியேற்றத்திற்கு, கல்வியாளர்களுக்கு மிகக் குறைந்த வேதனம் வழங்கும் நாடாக, அதுவும் எத்தியோப்பியா போன்ற பின் தங்கிய நாடொன்றிலும் பார்க்க குறைந்த வேதனம் வழங்கும் நாடாக இலங்கை விளங்குகின்றதும் ஒரு காரணமாகலாம்.
இப்படி இத்தொழிற்சங்கப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் விதமாக பல கட்டுரைகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்திருந்தன. எனினும் இன்னமும் பல ஊடகங்கள் இத்தொழிற்சங்கப் போராட்டத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதில் பின் நிற்பதாகவே தோன்றுகிறது.
”சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட்டது”  என்ற செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இவர்கள் ஏன் கல்வியாளர்களின் பிரச்சினைகளுக்கு கொடுக்க மறுத்துவிட்டனர் என்பது புரியவில்லை. இதையெல்லாம் விடுவோம்.. இப்போது ’எல்லாம் சரிவந்து விட்டது’ என்று பலரும் நினைப்பது போல் எல்லா நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் தலையசைத்து விட்டதா..? இந்தக் கேள்விக்கு யாரிடமும் இன்று சரியான பதில் இல்லை. இந்த இறுதித் தீர்மானங்கள் பற்றி எந்தவொரு சகோதர சங்ககங்களுக்கும் அறிவிக்கப்படவில்லையா..? அல்லது தெளிவு படுத்தியது போதாமல் உள்ளதா..? இப்படி பல கேள்விகளுக்கு விடை இல்லாமலையே இத்தொழிற்சங்கப் போராட்டம் தற்காலிக முடங்கு நிலையை அடைந்துள்ளது.

மேலும் கல்வியாளர்கள் பட்டியலில் உள்ள தற்காலிக உறுப்பினர்கள் பற்றி எந்த ஒரு வாக்கியத்தையும் அரசாங்கத்தின் அறிவித்தல் எனக் காட்டப் பட்ட அறிக்கையில் காணப்படாததையிட்டு அலட்டிக் கொள்ள யாருமே விரும்பவில்லை போலும்... இவர்களும் இத்தொழிற்சங்கப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடவேண்டிய விடயம். இப்பொழுது சகல கல்வியாளர்களும் எதிர்பார்த்திருக்கும் ஒரே விடயம் அரச சுற்றறிக்கை. இச்சுற்றறிக்கை வெளிவந்தவுடன் சகல கேள்விகளுக்கும் விடை தெரிய வருமா..? என்பதும் தற்போது கூறமுடியாமல் இருக்கிறது. இறுதி நேரத்தில் சில பல்கலைக்கழகங்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளை மீளத்தொடங்கியமை தொழிற்சங்க நடவடிக்கையை பாதிக்கும் என்பதனால் கூட தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப் பட்டிருக்கலாம்.

எது எவ்வாறெனினும், நியாயமான இப்போராட்டம், இருட்டடிப்புச் செய்யப்படாமல் நியாயமாகவே முடிவடைய வேண்டுமென்பதே பலரின் எதிர்பார்ப்பாகும். எனவே, பணி முடக்கம் அமுலில் இருந்த காலப்பகுதியில் இருந்த தொடர்பாடல் நிலை தற்போதைய நிலையிலும் காணப்பட்டால், சங்கத்தின் சகல நடவடிக்கைகளும் வெற்றியடையும் என்பதில் ஐயமில்லை.


Listen
Read phonetically

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக